நான் கல்லூரியில் படித்த நாட்களில் வார நாட்கள், வார இறுதி நாட்கள் என்று பார்த்ததில்லை. எந்த நாளில் நினைத்தாலும் நண்பர்களுடன் கூட்டமாக சினிமா சென்று சினிமா பாரப்பது வழக்கம். யார் நடித்த படம் என்று பார்ப்பதில்லை, விமர்சனம் எதுவும் தேவை இல்லை. வார இறுதி என்றாலே சினிமாதான் என்ற நிலை இருந்தது. நண்பர்களுடன் அரட்டை பேச்சாக இருந்தாலும் சரி, விவாதமாக இருந்தாலும் சரி 75% சினிமாவை பற்றித்தான் இருக்கும். அது ரஜினி, கமல் என்று ஆரம்பித்து விஜய், அஜித்தில் தொடர்ந்து வடிவேல், விவேக்கில் முடியும். இந்த நிலைமை என் நண்பர்கள் மத்தியில் மட்டும் இல்லை என்பது தான் என்னை மிகவும் வருத்தப்பட வைத்தது. மற்ற மாவட்டங்களிலும், ஏன் அடுத்த மாநிலங்களிலும் இத்தகையப் பேச்சுக்கள் இளைஞர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது மிகவும் மோசமான உண்மை. இதன் மூலம் நமக்கு பொது அறிவோ, விவாத திறமையோ வளரப்போவது இல்லை. மாறாக நண்பகர்களிடையே மனக்கசப்பு தான் மிஞ்சும். நான் நிறையவே சம்பாதித்து இருக்கிறேன்.
மேலும் என்னுள் எழுந்த சந்தேகங்கள் பல இன்னும் என் மன வருத்தத்தை அதிகப் படுத்தி உள்ளது. அவைகளை உங்களுடன் பகிர்கிறேன். பதில் இருந்தால் சொல்லுங்கள்.
நாம் பல இடங்களில் சினிமாவிற்கான விளம்பர சுவரொட்டியை பார்ப்பது உண்டு. அதில் தினசரி நான்கு காட்சிகள் என்று குறிப்பு இருக்கும். இங்கே எனக்கு கேள்வி நம்ம நாட்டில இத்தனை வெட்டி ஆபிசருங்களா இருக்காங்க இப்படி பகல் முழுவதும் தியேட்டரிலேயே உட்கார்ந்து நேரத்த போக்குறதுக்கு?
அப்படி என்ன சாகசம் செஞ்சுட்டாருனு இப்படி எல்லா நடிகர்களுக்கும் பாலபிசேகமும், பீராபிசெகமும் செய்றாங்க?
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதுக்காக சினிமால இருந்து வரவங்க எல்லாருமே (கிட்டத்தட்ட) பட்டா போட்டு வச்சுக்கிட்ட எப்படி? (அதுவும் வந்த வேகத்துல இதுவரை இருந்த தலைவர்கள் ஒருத்தர விடாம சண்டைக்கு இழுத்து அரசியல் நாகரிகம் வேற தேடிக்கிறாங்க)
இன்னும் நிறைய இருக்கு ஆனா Blog தாங்காது.
நடிகர்களையும், நடிப்புதுறையும் பற்றிய எனது கண்ணோட்டம். நம் மாலைப் பொழுதை இன்பமாக கழிக்கவும், நம் ஓய்வு நேரங்களை மகிழ்ச்சிகரமாக செலவு செய்வதற்கும் படைக்கப்பட்டவர்கள் (உருவாக்கப்பட்டவர்கள்) தான் நடிக, நடிகையினர் மற்றும் அனைத்து திரை (கலை) உலகினரும். ஆனால் நாம் அதை மறந்து அவர்களின் அடி போற்றி வருவதுதான் மிகவும் வெட்க கேடான ஒன்று. குறிப்பாக இன்றைய இளைஞர் சமுதாயத்தை எடுத்து கொள்வோம். அவர்கள் முக்கியமாகவும், அவசியமாகவும் விவாதிப்பது சினிமாவைப் பற்றி தான். அவர்களின் படிப்பை விட, தொழிலை விட சினிமா முக்கியதுவம் வாய்ந்ததாக இருக்கிறது. நம்மை களிப்பிக்க வைப்போருக்கு நாம் அடிமையாகிக் கொண்டு இருக்கிறோம். இந்த சூழல் நம்மை எங்கு இட்டு செல்லும்??
"கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே' என்று முழக்கமிட்ட ராதாவின் பெயரில் மன்றம் திறக்கப்போவதாகப் பெரியார் கூறியபோது அதைக் கூச்சத்துடன் நிராகரித்தார் ராதா. 1963இல் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தைத் திறந்து வைத்துப் பேசியபோது ""மற்ற நடிகர்களுக்குப் புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இம்மன்றத்தைத் திறந்து வைக்கிறேன்'' என்று பேசினாராம் பெரியார்.
நான் முழுமையாக சினிமாவை எதிர்க்கவில்லை. M.R. ராதா, கமல், அமீர் கான் போன்ற பலரும் சினிமா என்ற ஊடகத்தை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். (அன்பே சிவம்...) மாலை நேரங்களிலும், வார இறுதிகளில் மட்டுமே திரை அரங்கங்கள் இயங்கினால் நலம். சினிமாவை ஒரு பொழுது போக்கு அம்சமாக பார்த்தல் மிகவும் நன்று. இதுவே எனது விருப்பம்.